சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான இருவார கால புத்தாக்கப் பயிலரங்கம் புதன்கிழமை தொடங்கியது.
அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் சார்பில் பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கான மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழக அளவிலான இருவார கால புத்தாக்கப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. சேலம் அரசு பொறியியல் கல்லூரி மின்னணுவியல் துறையில் நடைபெற்ற புத்தாக்கப் பயிலரங்கினை, கல்லூரி முதல்வர் ஜி.விமலா ரோஸ்லின் தொடங்கி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற விழாவில் அவர் பேசியது: அரசு பொறியியல் கல்லூரிகளில் தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்திடும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சேலம் அரசு பொறியியல் கல்லூரி மின்னணுவியல் துறைக்கு ரூ.13 லட்சத்தில் நவீன ஆய்வுக் கருவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், அண்மைக்கால தொழில்நுட்பங்களை பேராசிரியர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், இருவார காலம் புத்தாக்கப் பயிற்சி
வழங்கப்படுகிறது.
இதன் மூலம், நவீன தொழில்நுட்பங்கள் பற்றி ஆசிரியர்கள் அறிந்துகொண்டு மாணவர்களுக்கு பயிற்றுவிக்க முடியும். மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடர்பியல் சார்ந்த புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் தொடர்பாக தேசிய தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர் என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில், மின்னணுவியல் துறைத் தலைவர் சி.வசந்தநாயகி,பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் மா.சாந்தி, இணை ஒருங்கிணைப்பாளர்கள் பா.இந்திரா, இ.கல்பனா, க.ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இப்பயிலரங்கில், தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 50 பேராசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.