மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில்குமார் வெற்றிபெற்றதையடுத்து, புதன்கிழமை மேட்டூர் நகராட்சிப் பகுதியில் வாக்காளர்களை சந்தித்து அவர் நன்றி தெரிவித்தார் .
மேட்டூர் ரயில் நிலையத்தில் தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு, சேலம் மேற்கு மாவட்டச் செயலர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமை வகித்தார். அவைத் தலைவர் பா.கோபால் முன்னிலை வகித்தார்.
மேட்டூர் நகராட்சிப் பகுதிக்கு உள்பட்ட தங்கமாபுரிபட்டணம், அண்ணா நகர், பெரியார் நகர், சுப்பராயன் நகர், காவேரி நகர் மற்றும் சதுரங்காடி பகுதியில் நன்றி தெரிவித்த அவர், தொடர்ந்து மேட்டூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டார்.
இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், மேட்டூர் நகர் தி.மு.க. செயலர் காசிவிஸ்வநாதன், துணை செயலர் ராஜா, அவைத் தலைவர் ரங்கசாமி, நங்கவள்ளி ஒன்றிய செயலர் கே.எம்.ரவிச்சந்திரன், மேட்டூர் நகர காங்கிரஸ் தலைவர் வெங்கடேஸ்வரன், காங்கிரஸ் மாநில மனித உரிமைகள் பிரிவு செயலர் அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.