எடப்பாடி, ஜூன் 13: சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்தீபன் எடப்பாடி நகரில் வாக்காளர்களுக்கு அண்மையில் நன்றி தெரிவித்தார்.
முன்னதாக எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு முப்பனூர் பகுதியில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் நன்றி தெரிவித்து அவர் பேசியதாவது: இப் பகுதி மக்கள் தங்கள் பகுதியில் நிலவும் குறைகள் குறித்து, எந்த நேரத்திலும் தனக்கு தகவல் அளித்திடலாம். அதற்கான தீர்வை ஏற்படுத்திட உடனடியாக ஆவனசெய்வதாக உறுதியளித்தார். இங்கு தடையற்ற குடிநீர் வினியோகம் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறு சலுகைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனக் கூறினார். நிகழ்ச்சியில் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், மாவட்டத் துணைத் தலைவர் சம்பத்குமார், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம், நகரச் செயலாளர் டி.எம்.எஸ்.பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.