சேலம், ஜூன் 13: சேலத்தில் தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வந்த நபரை போலீஸார் தமிழ்நாடு கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
சேலம் பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் (42). குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் துறையினர் அத்தியாவசியப் பண்டங்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் தொடர்பாக கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி கொண்டலாம்பட்டி எஸ்.கே. கார்டன் அருகில் இருந்த வேனை சோதனை செய்தனர்.
அப்போது தலா 50 கிலோ எடை கொண்ட 37 மூட்டைகளில் 1,850 கிலோ பொதுவிநியோகத் திட்ட அரிசியுடன் இருந்த மூன்று நபர்களை கைது செய்தனர். விசாரணையில் கர்நாடகத்துக்கு அரிசியைக் கடத்திச் செல்ல இருந்தது தெரியவந்தது.
மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சேலம் நகர பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,750 கிலோ பொது விநியோகத் திட்ட அரிசி கைப்பற்றப்பட்டது .
மேலும் சரவணன் பொதுவிநியோகத் திட்ட அரிசியை விற்பனைக்காக கடத்திச் செல்ல வாகனங்களையும் கொடுத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த சரவணன் கடந்த மே மாதம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணையில் சரவணன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இது போன்ற தொடர் குற்றம் புரிந்ததற்காக சேலம் மற்றும் கிருஷ்ணகிரி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினரால் சரவணன் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் சரவணன் தொடர்ந்து அரசால் வழங்கப்படும் பொதுவிநியோகத் திட்ட ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கி வைத்து வெளி மாநிலங்களுக்கு கடத்திச் சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததற்காக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை சேலம் அலகு காவல் ஆய்வாளர் வி. பத்மாவதியின் பரிந்துரைப்படி, சேலம் மாநகர காவல் ஆணையர் கே.சங்கர், கள்ளச்சந்தைதாரர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க செவ்வாய்க்கிழமை ஆணை பிறப்பித்தார்.
இதைத்தொடர்ந்து சரவணன் கள்ளச்சந்தைதாரர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.