தம்மம்பட்டியில் நெகிழிப்பைகள் பயன்பாடு அதிகரித்துவருவதாக சமூக ஆர்வலர்கள் புகார்கூறுகின்றனர்.
தமிழகத்தில் நெகிழிப்பைகளை ஜனவரி 1-ஆம் தேதி முதல் முற்றிலும் தமிழக அரசு தடை செய்துள்ளது.
இந்த நிலையில், நெகிழிப்பை விற்பனை, பயன்பாடு குறித்து அவ்வப்போது பேரூராட்சி நிர்வாகமும், பிற துறை அலுவலர்களும் ஆய்வு செய்து, பறிமுதல் செய்துவந்தனர். இதனால் தம்மம்பட்டியில் வணிகக் கடைகளில் நெகிழிப்பைகளை வாங்கி உபயோகிப்பதை முற்றிலும் நிறுத்தினர்.
இந்த நிலையில், தற்போது தம்மம்பட்டி பேரூராட்சி நிர்வாகமும், பிற துறையினரும் நெகிழிப்பைகள் உபயோகிப்பதையும், ஒட்டுமொத்தமாக வாங்கி விற்பனை செய்வோரையும் கண்டுகொள்ளாத நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதன்காரணமாக, நெகிழிப்பைகள் விற்பனை அதிகரித்துள்ளது. இதோடு, தேநீர்க் கடைகளில் நெகிழிப்பைகளில் டீ வாங்கிச்செல்லுதல், காகித,நெகிழிக் கப்புகள் விற்பனையும்,உபயோகமும் அதிகளவில் காணப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.