தாரமங்கலத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து, பணம் மற்றும் நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாரமங்கலம் ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பழனிமலை (78). இவரது மனைவி பாக்கியலட்சுமி (70). இருவரும் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளனர். இவர்களுக்கு வாணி, ரஞ்சனி ஆகிய இருமகள்கள் உள்ளனர்.
பழனிமலைக்கு உடல்நிலை சரியில்லாததால், சிகிச்சைக்காக மனைவியுடன் சேலத்தில் உள்ள மகள் ரஞ்சனி வீட்டுக்கு கடந்த வாரம் சென்றாராம். பின்னர் திங்கள்கிழமை வீட்டுக்கு வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த ரூ.45 ஆயிரம் ரொக்கம், 21 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடு போனது தெரியவந்ததாம். புகாரின் பேரில் தாரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.