சங்ககிரி வட்டத்துக்குள்பட்ட 15 கிராமங்களின் ஜமாபந்தி சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஜமாபந்தியில் முதியோர் ஓய்வூதியத் தொகை, வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை உள்ளிட்டவை குறித்து 425 மனுக்கள் பெறப்பட்டன.
கெடிகாவல், வைகுந்தம், அக்ரஹார தாழையூர், காளிகவுண்டம்பாளையம், கன்னந்தேரி, அ.புதூர், ஏகாபுரம், இடங்கணசாலை பிட்-1, பிட்-2, தப்பகுட்டை, நடுவனேரி, எர்ணாபுரம், கனககிரி, கூடலூர், கண்டர்குலமாணிக்கம் உள்ளிட்ட கிராமங்களின் கணக்குகளை சங்ககிரி வருவாய் கோட்டாட்சியரும், ஜமாபந்தி அலுவலருமான மு.அமிர்தலிங்கம் தணிக்கை செய்தார்.
பின்னர் அவரிடம் இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், பட்டா மேல்முறையீடு, அனுபவ சான்று, அளவீடு செய்ய கோருதல், முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை உள்ளிட்டவைகள் குறித்து 425 பேர் மனுக்களை அளித்தனர். அதனையடுத்து ஜமாந்தி தொடங்கிய நாள் முதல் நிறைவு நாள் வரை பொதுமக்களிடமிருந்து பெற்ற மனுக்களில் 23 மனுக்கள் மீது உடனடித் தீர்வு காணப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வகுமார், வட்டாட்சியர் கே.அருள்குமார், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஜெயக்குமார், மண்டல துணை வட்டாட்சியர் மாணிக்கம், தேர்தல் துணை வட்டாட்சியர் சிவராஜ், தலைமை நிலஅளவை அலுவலர் ஜி.ரமேஷ் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் தணிக்கையின் போது உடனிருந்தனர்.