நிதி நிறுவன அதிபர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டது குறித்து தலைவாசல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் மும்முடி இராமசாமி கவுண்டர் மகன் கொம்பாட்டி மணி (55), கனரக வாகனங்களுக்கு நிதி கொடுத்தும், ரியல் எஸ்டேட் வேலையும் செய்து வருகிறார். திருமணமான இவருக்கு, குழந்தைகள் இல்லை.
இந் நிலையில், திங்கள்கிழமை காலை காட்டுக்கோட்டை அடுத்துள்ள சம்பேரிக்குச் சென்றவர் சாலையில் நின்று கொண்டிருந்தாராம். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள், அவரை தாக்கி காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் மணியின் சகோதரர் துரைராஜ் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து சென்ற துரைராஜ் கொம்பாட்டி மணி, தலைவாசல் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
அதன் பேரில் வந்த தலைவாசல் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். கொடுக்கல், வாங்கலில் ஏதாவது தகராறு ஏற்பட்டுள்ளதா அல்லது தொழில் போட்டியா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.