காரை வழிமறித்து பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளரை கடத்திய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள தாண்டவராயபுரம் பவர் ஹவுஸ் பகுதியில் குடியிருந்து வரும் ராஜமாணிக்கம் மகன் சுரேஷ் (35), மல்லியகரையில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் வீட்டுக்கு வந்து உணவருந்திவிட்டு பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு கார் மூலம் சுரேஷ் புறப்பட்டார். இவரது காரை ஒரு கார் தொடர்ந்து வருவதாக அறிந்த சுரேஷ், காரை வேகமாக இயக்கியுள்ளார்.
மோட்டூர் பகுதியில் சென்ற போது பின்னால் வந்த கார் சுரேஷின் காரை வழிமறித்துள்ளது. பின்னர், அக் காரில் வந்தவர்கள்அவரை தாக்கி கடத்திச் சென்றனராம். அப்போது, அந்த வழியே வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் அவர்களைத் துரத்தியும் பிடிக்க முடியவில்லையாம்.
தகவல் அறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற மல்லியகரை காவல் ஆய்வாளர் (பொ) ரவிக்குமார் மற்றும் போலீஸார் அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரித்தனர். மேலும், அவரது உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.