சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள தப்பகுட்டை கிராமம் அத்தனூர் பகுதியில் வசிக்கும் நடராஜன் (38), கராத்தே துறையில் 100 சாதனைகளை படைக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நிகழ்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
இவர், 600-க்கும் மேற்பட்ட உறிஞ்சுக் குழாய்களை வாயில் நுழைத்து இரண்டு உலக சாதனை படைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மூக்கில் ஆணிகள் மற்றும் டிரில்லிங் மெஷின்கள் பயன்படுத்தியும், பாட்டிலில் அரை லிட்டர் தண்ணிரை தலையில் தொங்கியபடி குடித்தும், 2 கிலோ பீர்க்கங்காயை ஒன்றாக வாயில் நுழைத்தும், ஒரு டஜன் ரப்பர் பால்களை வாயில் நுழைத்தும், சிலிண்டரை நகத்திலும், மீசை முடியிலும் தூக்கியும், காரை நகத்திலும், தலைமுடியிலும் இழுத்தும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். இதனை அறிந்த ஜப்பான் நாட்டினர், நடராஜனின் சொந்த ஊரான அத்தனூர் கிராமத்துக்கு நேரில் வந்து அவருடைய சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டு பாராட்டி சென்றனர்.