சேலத்தில் இரிடியம் இருப்பதாகக் கூறி ரூ.55 லட்சம் மோசடி செய்த நான்கு பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரவீண்குமார் (45), வெள்ளிப் பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் சென்னையைச் சேர்ந்த சிலர் தங்களிடம் இரிடியம் இருப்பதாகவும், இதை விற்றால் பல கோடி லாபம் ரூபாய் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய பிரவீண்குமார் பல தவணைகளாக ரூ.55 லட்சம் வரை பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் சென்னை கும்பல் பிரவீண்குமாரை அழைத்துச் சென்று கருப்புப் பெட்டி ஒன்றைக் காண்பித்து, இதற்குள் இரிடியம் இருக்கிறது, இதற்கென உள்ள தனி உடை அணிந்து கொண்டுதான் இரிடியம் இருக்கும் பெட்டியைத் திறக்க முடியும் எனக் கூறினராம். தனி உடை வாங்க மேலும் பணம் தருமாறு அக் கும்பல் கேட்டுள்ளனர்.
இதில் சந்தேகமடைந்த பிரவீண்குமார், சேலம் மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து, இதுகுறித்து விசாரிக்க சேலம் மாநகர மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. காவல் ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் குமார் ஆகியோர் கொண்ட 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சென்னையைச் சேர்ந்த தினேஷ் குமார், சிவக்குமார் , சேலத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் ஆந்திரத்தைச் சேர்ந்த ஒருவர் என நான்கு பேரையும் தனிப் படையினர் கைது செய்தனர். இதுதவிர மேலும் இரண்டு பேரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த மோசடி கும்பல் கொடுத்த கருப்புப் பெட்டியை தனிப்படை போலீஸார் சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்துக்கு எடுத்துச் சென்று வெடிகுண்டு நிபுணர்கள் முன்னிலையில் திறந்து பார்த்தனர். அதில், பெட்டிக்குள் பஞ்சு வைக்க்ப்பட்டு ஒரு வித ரசாயனம் கொட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இந்த கும்பல் வேறு எங்கும் மோசடி செய்துள்ளனரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.