ஓமலூர் அருகேயுள்ள காடையாம்பட்டி வனப் பகுதியில் முகாமிட்டிருந்த இரண்டு யானைகள் செவ்வாய்க்கிழமை மேச்சேரி வனப் பகுதிக்கு இடம்பெயர்ந்தன.
ஓமலூர் அருகேயுள்ள டேனிஷ்பேட்டை வனச்சரகம், குண்டுக்கல் வனப் பகுதியில் இரட்டை யானைகள் ஞாயிற்றுக்கிழமை முகாமிட்டன. இங்குள்ள குண்டுக்கல் வனத்தில் சுற்றித்திரியும் பெண் யானையுடன் வந்துள்ள மக்னா யானை செவ்வாய்க்கிழமை மூன்றாவது நாளாக அதே பகுதியில் முகாமிட்டிருந்தது. கிராம மக்கள் உதவியுடன், வனத் துறையினர் பட்டாசு வெடித்து, அவற்றை திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், யானைகள் மீண்டும் பழைய இடத்துக்கே வந்து இரவு முழுவதும் தங்கிவிட்டன. இதனைத் தொடர்ந்து, வனப் பகுதியில் உள்ள மரக்கிளைகளை உடைத்து சாப்பிட்ட யானைகள், அங்குள்ள குளத்தில் தண்ணீர் குடித்தன.
இந்த நிலையில், யானைகளை அதன் போக்கில் அனுப்பும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். மெதுவாக செல்லத் தொடங்கிய யானைகள், திடீரென பையூரான்கொட்டாய் ஊருக்குள் புகுந்தன. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே வந்து பின்னர், வனப் பகுதிக்குள் சென்றதாக மக்கள் தெரிவித்தனர். வனத் துறையினர், கிராம மக்கள் உதவியுடன் யானைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மூன்றாம் நாளாக யானைகளை விரட்ட மேட்டூர், சேலம் மற்றும் தருமபுரி வனச் சரகத்திலிருந்து கூடுதல் வனத்துறை அதிகாரிகளை வரவழைத்து யானைகளின் செயல்பாடுகளை கண்காணித்து, அதன் நடவடிக்கைகளை தெரிந்துகொண்டு அதன்பிறகு அவற்றை அதன் வாழிடத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே, வனத் துறையினரின் தொடர் முயற்சிக்குப் பிறகு, டேனிஷ்பேட்டை வனப் பகுதியில் இருந்து மேச்சேரி வெள்ளார் பகுதிக்கு யானைகள் இடம் பெயர்ந்துள்ளன.