ஏற்காட்டில் மண் சாலையை தார்ச் சாலையாக அமைக்கக் கோரி மலைகிராம பழங்குடியின மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஏற்காடு மாரமங்கலம் ஊராட்சி உட்பட்ட நார்த்தஞ்சேடு, செந்திட்டு,அரங்கம், சின்னமதூர்,மதூர், பெலாக்காடு கேளையூர் ,மாவூத்தூர், குட்டமத்திக்காடு உள்ளிட்ட 17 கிராம, குக்கிராம பழங்குடியின மக்கள் கொட்டச்சோடு முதல் செந்திட்டு வரை 3 கிலோ மீட்டர் தொலைவில் பயன்படுத்தும் தனியார் மண் சாலையை தார்ச் சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்காடு பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சுமார் 350-க்கும் மேற்பட்ட ஆண்கள் ,பெண்கள் பேரணியாக வட்டாட்சியர் அலுவலகம் வரை சென்றனர். பின்பு ஏற்காடு வட்டாட்சியரிடம் கிராம பழங்குடியின மக்கள் சார்பில் கண்ணாடி ராஜி, கிருஷ்ணன், ராவி ஆகியோர் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.