சேலம் மாவட்டத்தில் மார்ச் 10 ஆம் தேதி 3,71,089 குழந்தைகளுக்கு ஒரே சுற்றில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நாடு முழுவதும் பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்குள்பட்ட
அனைத்துக் குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து மார்ச் 10 ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் முதல் தவணையில் 3,73,186 குழந்தைகளுக்கும், இரண்டாவது தவணையில் 3,73,739 குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் 3612 மையங்களில் மார்ச் 10 ஆம் தேதி காலை 7 மணி முதல்
மாலை 5 மணிவரை ஐந்து வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கூடுதல் தவணை போலியோ சொட்டு மருந்து அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், தனியார் மருத்துவமனைகளிலும் வழங்கப்பட உள்ளது.ஏற்காட்டில் 6 நடமாடும் சொட்டு மருந்து முகாம்களும், அயோத்தியாபட்டணம், வீரபாண்டி மற்றும் எடப்பாடி பகுதிகளில் தலா ஒரு நடமாடும் சொட்டு மருந்து முகாம்களிலும், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுங்கச்சாவடிகள், திரையரங்குகள், சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் விழா நடைபெறும் இடங்களில் 77 போக்குவரத்து முகாம்கள் வாயிலாக போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படவுள்ளது.
அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பெரு நகர பேருந்து நிலையங்கள், ரயில் நிலைய சந்திப்புகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் தொடர்ந்து 3 நாள்களுக்கு 24 மணி நேரமும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.
இந்தப் பணிக்காக சுகாதாரத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம், பள்ளி மற்றும் கல்லூரி கல்வித் துறையைச் சார்ந்த 10,057 பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் ஈடுபடவுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் 3,71,089 குழந்தைகளுக்கு ஒரே சுற்றில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இதுவரை எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து அளித்திருந்தாலும் கூடுதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து பெற்று தங்கள் குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கே.பூங்கொடி தெரிவித்துள்ளார்.