கெங்கவல்லி அருகே கடம்பூரில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால், விழா நடைபெறவிருந்த பகுதி வெறிச்சோடியது.
கடம்பூரில் முதன்முதலாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு, அப்பகுதி மக்கள் முறைப்படி அரசிடம் அனுமதி பெற்றனர். அனுமதி ஆணையில், அந்த விழாவை மார்ச் 5ஆம் தேதி முதல் மார்ச் 15-க்குள் நடத்திக்கொள்ளவும் குறிப்பிட்டிருந்தது. அதனையடுத்து, கடம்பூர் விழாக் குழுவினர், விழாவை மார்ச் 15-இல் நடத்திக்கொள்ள அனுமதி கேட்டிருந்தனர்.இந்நிலையில் மார்ச் 10ஆம் தேதி மக்களவைத் தேர்தல் அறிவிப்பால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதைத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டு விழாவில் வழங்கப்படும் பரிசுகளுக்கு அனுமதியில்லை. மேலும் தேர்தல் நேரத்தில், காவலர்களும்,அரசு அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், ஜல்லிக்கட்டு விழாவுக்கு பாதுகாப்பு வழங்க இயலாது. இதனால் மார்ச் 15-இல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தடையைமீறி கடம்பூரில் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சிக்கப்படுவதாக ஒரு தகவல் பரவியது. அதுகுறித்து அங்கு போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.இருப்பினும் காலை முதல் மாலை ஜல்லிக்கட்டு விழா மேடை பகுதிக்கு யாரும் வராததால், அப்பகுதி வெறிச்சோடியது. தேர்தல் முடிந்த பின்னர்,அங்கு ஜல்லிக்கட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த அப்பகுதி மக்கள் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்பட்டது.