தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி ராம்தாஸ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
மேட்டூர் சட்டமன்றத் தொகுதியின் சில பகுதிகள் தமிழக-கர்நாடக எல்லையை ஒட்டி அமைந்துள்ளன. தேர்தல் காலத்தில் இவ் வழியாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்கவும், பாதுகாப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
காரைக்காடு போலீஸ் சோதனைச் சாவடி, கொளத்தூர் வனத் துறை சோதனைச் சாவடி, கருங்கல்லூரில் உள்ள வாக்குச்சாவடி மற்றும் வனப் பகுதியை ஒட்டி உள்ள வாக்குச்சாவடிப் பகுதிகளை ஆட்சியர் ரோஹிணி ராம்தாஸ் ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆய்வின் போது, மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் லலிதா, மேட்டூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சௌந்திரராஜன் உள்ளிட்ட அதிகாரிகள்
உடனிருந்தனர்.