பொள்ளாச்சி ஆபாச விடியோ சம்பவத்தைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள் சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை ஆபாச விடியோ எடுத்து பாலியல் தொல்லை அளித்த வழக்கு தொடர்பாக நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.இச்சம்பவத்தைக் கண்டித்து சேலம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தநிலையில் சேலம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் திரண்டு அம்பேத்கர் சிலை, முள்ளுவாடி கேட் வழியாக ஆட்சியர் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். அப்போது மாணவ, மாணவிகளை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் மாணவ, மாணவிகள் சாலையில் அமர்ந்தபடி கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது, முக்கிய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டவர்கள் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதால், எந்தவித விசாரணையுமின்றி உடனடியாக தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர். அவர்களை போலீஸார் சமரசம் செய்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.