கெங்கவல்லி அருகே ஒதியத்தூரில் நடந்த வாகன சோதனையில், மாடு வாங்க எடுத்துச் சென்ற பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கெங்கவல்லி அருகே ஒதியத்தூர் ஊராட்சிக்குள்பட்ட ஒதியத்தூர்கேட் பேருந்து நிறுத்தத்தில் 1ஆவது பறக்கும் படைக் குழுவினர் குணசேகரன்,எஸ்.எஸ்.ஐ.புருஷோத்தமன் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை காலை வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது சேலம், கூட்டாத்துப்பட்டியைச் சேர்ந்த ராயப்பன், ஆறுமுகம், அலெக்சாண்டர் ஆகியோர் கெங்கவல்லி அருகே உள்ள வீரகனூரில் நடைபெறும் மாட்டுச் சந்தையில், மாடு வாங்கப் பணத்துடன் தனி வாகனத்தில் அந்த வழியே வந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த தேர்தல் பறக்கும் படையினர், அவர்களிடம் இருந்த ரூ.1.79 லட்சத்துக்கு ஆவணங்கள் இல்லாததால், அந்த தொகை முழுவதையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தொகை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வேடியப்பனிடம் ஒப்படைக்கப்பட்டு, கருவூலத்தில் செலுத்தப்பட்டது.