ஆத்தூர் கிரைன் பஜாரில் மரவள்ளிக் கிழங்கு புரோக்கர் அலுவலகத்தில் சனிக்கிழமை காலை ஊழியரைத் தாக்கி ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் கிரைன் பஜாரில் கிழங்கு புரோக்கர் அலுவலகம் உள்ளது. இதில் பாபு (52) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சனிக்கிழமை காலை உரிமையாளர் வீட்டில் இருந்து ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு பாபு அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அப்போது இரண்டு பேர் முகமூடி அணிந்து வந்து கிழங்கு விலைக்கு குறித்து விசாரித்துக் கொண்டே பாபுவை தாக்கி நாற்காலியில் கட்டிப் போட்டு விட்டு, அங்கிருந்த ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று
விட்டனர்.
சிறிது நேரம் கழித்து பாபு மெதுவாக வெளியே வந்து சத்தமிட்டுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் வந்து அவரின் கட்டை அவிழ்த்து விசாரித்தனர்.அப்போது பணம் திருட்டுப் போன விஷயம் தெரியவந்தது. இதையடுத்து ஆத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜூ, காவல் ஆய்வாளர் என்.கேசவன் ஆகியோர் விரைந்து சென்று பாபுவிடம் விசாரணை நடத்தினர். மேலும், வழக்குப் பதிவு செய்து அலுவலகத்தின் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை வைத்து விசாரித்து வருகின்றனர்.