தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சங்ககிரி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக முழங்கால் மூட்டு மாற்று மற்றும் இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
எடப்பாடி, வெள்ளாண்டிவலசு அருகே உள்ள சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்த இருளப்பன் மனைவி சின்னப்பொண்ணு (65). இவர் இடது பக்க முழங்கால் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து சங்ககிரி அரசு மருத்துவனையில் பரிசோதனை செய்துள்ளார். இதையடுத்து முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சங்ககிரி அரசு தலைமை மருத்துவ அலுவலர் எஸ்.செந்தில்குமார் தலைமையில் மருத்துவர்கள் எஸ்.சரவணகுமார், ஆர்.திருமாவளவன், செந்தில்வேல் ஆகியோர் கொண்ட குழுவினர் சின்னப்பொண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.
இடும்பு எலும்பு மாற்று அறுவை கிசிச்சை...
சங்ககிரி வட்டம், கத்தேரி அருகே உள்ளசாமியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வையாபுரி மகன் முருகன் (43). தனியார் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவருக்கு இடுப்பு எலும்பு பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டதால் எலும்பு தேய்மானம் ஏற்பட்டு நடக்க முடியாமல் இருந்துள்ளார். இதையடுத்து சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவக்குழுவினர் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இடது பக்க இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். இதையடுத்து அறுவை கிசிச்சை செய்து கொண்ட சின்னப்பொண்ணுவும், முருகனும் உள்நோயாளிகளாக சிகிச்சை அளிக்கப்பட்டு நடக்க ஆரம்பித்துள்ளனர்.
சங்ககிரி அரசு மருத்துவமனையில் முழங்கால் மூட்டு மற்றும் இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சைகளை முதல் முறையாக செய்துள்ள மருத்துவக் குழுவினருக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.