சங்ககிரியில் காவல்துறை, லாரி உரிமையாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

சங்ககிரி காவல் துறை,  லாரி உரிமையாளர்கள் சங்கம் இணைந்து, லாரி டயர்கள் திருடப்படுவதைத்  தடுப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம்


சங்ககிரி காவல் துறை,  லாரி உரிமையாளர்கள் சங்கம் இணைந்து, லாரி டயர்கள் திருடப்படுவதைத்  தடுப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க வெள்ளிவிழா கட்டட வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வி.செல்வராஜூ தலைமை வகித்து பேசியது:
கடந்த இரு வருடங்களுக்கு முன்பு லாரிகள் திருடிச் செல்லப்பட்டு கிடைக்காமல் இருந்தன. இதனையடுத்து ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்த லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து தற்போது திருடப்பட்ட சில மணி நேரங்களிலே லாரிகள் எளிதாகக் கண்டுபிடிக்கப்படுகின்றன. தற்போது சங்ககிரி பகுதி லாரிகள் மற்றும்  பட்டறைகளில் நிறுத்தப்படும் லாரிகளிலிருந்து டயர்கள் திருடப்பட்டு வருகின்றன. இதனைத் தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க  வேண்டுகோள் விடுத்தார். 
இதையடுத்து சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் முத்துசாமி பேசியது:  லாரி டயர்கள் விற்பனை செய்யும் கடைக்கரார்கள்  விற்பனை செய்யப்படும்  டயர்களின் எண்ணை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். லாரி  பட்டறைகள், வர்ணம் பூசுபவர்கள், லாரிகளுக்கு பாடிக் கட்டுபவர்கள் உள்பட இத்தொழிலைச் சார்ந்து உள்ள பல்வேறு பட்டறைகளில் கேமிராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்தாத லாரிகளில் உடனடியாக பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டறைகளில் இரவு நேரக் காப்பாளராக வயதானவர்களை நியமிக்காமல், மது அருந்தாமல் முறையாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றார். 
சங்ககிரி போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் தினகரன் பேசியது:
நகரில் போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்தால் நெரிசல்  குறையும். செல்லிடப்பேசிகளை பேசிக்கொண்டும், மது அருந்தியும் லாரிகளை இயக்க ஒட்டுநர்களை அனுமதிக்கக் கூடாது. சட்டவிதிமுறைகளை மீறி செயல்படும் ஓட்டுநர்கள் மீது குற்ற நடவடிக்கைகளை போலீஸார் எடுக்கும் போது காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். 
இதையடுத்து சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் மைக்கேல் அந்தோணி, போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் பேசினர். 
லாரி உரிமையாளர்கள் சங்கச் செயலர் கே.கே.நடேசன் வரவேற்றார்.  உப தலைவர் ஆர்.ஆர்.மோகன்குமார், இணைச் செயலர் எம்.சின்னத்தம்பி, லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள்,  லாரி உரிமையாளர்கள் பாடி பில்டர் சங்கம், மெக்கானிக் பட்டறை உரிமையாளர்கள் நலச் சங்கம், டயர் ரீட்ரெட்டிங்,  பழைய டயர் விற்பனையாளர்கள் சங்கம், பழைய இரும்பு விற்பனையாளர்கள் சங்கம், லாரிகளுக்கு வர்ணம் பூசுபவர்கள் நலச் சங்கம், லாரிகளில்  எலக்ட்ரிக்கல் வேலை செய்வோர் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
சங்கபொருளாளர் என்.மோகன்குமார் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com