மக்களவைத் தேர்தலில் பெற்றோர்கள் அனைவரும் தவறாது வாக்களித்திடுமாறு மாணவ, மாணவியர் வலியுறுத்திட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சேலம் தெற்கு தொகுதிக்குள்பட்ட கோட்டம் எண் 54, முனியப்பன் கோயில் தெருவில் தேர்தல் விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற கோலப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் பாராட்டினார்.
மக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், சேலம் தெற்கு தொகுதிக்குள்பட்ட பகுதியில் பல்வேறு விழிப்புணர்வுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், தற்போது 18 வயது பூர்த்தியடைந்து முதல் முறையாக வாக்களிக்க உள்ள புதிய வாக்காளர்களை வாக்களிக்க வைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்கள் மூலமாகவே மேற்கொள்ளும் நடவடிக்கையின் அடிப்படையில், குடியிருப்பு பகுதிகளில் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்திடும் வகையில் கோலப்போட்டிகள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில், சேலம் தெற்கு தொகுதிக்குள்பட்ட கோட்டம் எண் 54 - முனியப்பன் கோயில் தெருவில் கோலப்போட்டிகள் நடைபெற்றன.
இதில் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்திடும் வகையில் பல்வேறு வாசகங்களை கொண்டு கோலங்கள் வரையப்பட்டிருந்தன.
இதைப் பார்வையிட்ட உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ், சிறப்பாக கோலங்கள் வரைந்தவர்களை பாரட்டினார். வரும் ஏப்.18 ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும், மாணவ - மாணவியர், தங்களது பெற்றோர்களை கண்டிப்பாகத் தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
நிகழ்ச்சியில் கூடுதல் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் மா.சுந்தர்ராஜன், உதவி பொறியாளர் ஜே.நித்யா, சுகாதார அலுவலர் எம்.சேகர், உதவி வருவாய் அலுவலர் எம்.செந்தில்முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.