மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அதன் உரிமையாளர்கள் காவல் நிலையங்களில் ஒப்படைத்து வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் விதமாகவும், தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை
செய்திட தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், எடப்பாடி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட
பகுதியில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள், பொது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உரிமம் பெற்ற துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். இந்த நிலையில் எடப்பாடி காவல் நிலையத்தில் 14 உரிமம் பெற்ற துப்பாக்கிகள், கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் 38 துப்பாக்கிகள்
பூலாம்பட்டி காவல் நிலையத்தில் 24 துப்பாக்கிகள் என மொத்தம் 76 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவை காவல் நிலைய
ஆயுதக்கிடங்கில் பாதுகாக்கப்பட்டு, மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகே முறைப்படி உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் தெரிவித்தனர்.