கெங்கவல்லி அருகே கூடமலையில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கெங்கவல்லி - தம்மம்பட்டி சாலையில் உள்ள கூடமலை ஊராட்சியில் 3, 9 மற்றும் 10 -ஆவது வார்டு பகுதிகளில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக மேட்டூர் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். ஆனால் மற்ற வார்டுகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறதாம்.
இதையடுத்து அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை கூடமலை அண்ணாசிலை பேருந்து நிறுத்தம் பகுதியில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சேட்டு மற்றும் கெங்கவல்லி போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் விநியோகத்தை சீராக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சுமார் 2 மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.