வாழப்பாடி அருகே மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் மூன்று மாத ஆண் குழந்தையை மூச்சை அடைத்து கொலை செய்த தந்தையை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வாழப்பாடி அடுத்த சேசன்சாவடி கிழக்குக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பூமலை மகன் கேசவன் (33). தனியார் பால் பண்ணையில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி அபிராமி (27). கடந்த ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
அபிராமி ஏற்கெனவே திருமணமாகி விவகாரத்து பெற்றவர் என்பதால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. மகப்பேறுக்காக தாய் வீட்டுக்குச் சென்று இருந்தார் அபிராமி.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை தாய் லட்சுமி மற்றும் உறவினர்கள் சிலருடன் மாமனார் வீட்டுக்குச் சென்று அபிராமியை குடும்பம் நடத்த வருமாறு கேசவன் அழைத்துள்ளார். ஆனால் அபிராமி வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கேசவன், தனது 3 மாத ஆண் குழந்தையை தூக்கிச் சென்று விட்டார்.
இதையடுத்து குழந்தை கீர்த்திவாசனை, கணவர் கேசவன் துணியை வைத்து மூச்சை அடைத்து கொலை செய்து விட்டதாக அபிராமி, வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து, இறந்து போன குழந்தையைக் கைப்பற்றிய போலீஸார், உடற்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையைக் கொலை செய்த தொழிலாளி கேசவன் மற்றும் அவரது தாய் லட்சுமி ஆகியோரை பிடித்து, வாழப்பாடி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.