சேலத்தில் லாட்டரி சீட்டு வியாபாரியின் வீட்டில் இருந்து சுமார் ரூ.34 லட்சம் ரொக்கம், நகைகள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம் சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (53). இவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக, 10 - க்கும் மேற்பட்ட வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளன. மேலும், இரண்டு முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்.
இந்த நிலையில், ரகசிய தகவலின்பேரில் அஸ்தம்பட்டி உள்ள அவரது வீட்டில் காவல் உதவி ஆணையர் ஆனந்தகுமார், ஆய்வாளர் பொன்ராஜ் உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை காலை சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் லாட்டரி சீட்டுகளும், கட்டுக் கட்டாக பணமும் இருப்பது தெரியவந்தது.
மக்களவைத் தேர்தல் நேரத்தில் லட்சக்கணக்கில் பணம் இருந்ததால் அதுபற்றி வருமான வரித் துறையினருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரி சிவச்செல்வி தலைமையில் 10 அதிகாரிகள் விரைந்துவந்து விசாரித்தனர். மேலும் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அவர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் சுமார் ரூ.34 லட்சத்துக்கும் மேலாக ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும் கண்ணனிடம் எப்படி இவ்வளவு பணம் வந்தது என்பது குறித்தும், அதற்கான உரிய ஆவணங்களையும் தருமாறு வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர். இத்துடன் கண்ணன் வீட்டில் ஏராளமான ஆவணங்கள், நகைகளையும் பறிமுதல் செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.