சங்ககிரியை அடுத்த குப்பனூர் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகனச் சோதனையில் ஆட்டு வியாபாரியிடமிருந்து ரூ. 2. 55 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சங்ககிரியில் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சி. ஜெயசீலன் தலைமையிலான பறக்கும் படையினர் சங்ககிரியை அடுத்த குப்பனூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரிலிருந்து சங்ககிரி நோக்கி வந்த மினி டெம்போவை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் ரூ. 2 லட்சத்து 55 ஆயிரம் உரிய ஆவணமின்றி இருந்தது
தெரியவந்தது.
இதுகுறித்து குழுவினர் நடத்திய விசாரணையில் வாகனத்தில் வந்தவர் கோரணம்பட்டி கிராமம், எட்டிகுட்டை மேடு பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் குமார் (37), அவர் கொங்கணாபுரம் பகுதிகளில் ஆடுகளை வாங்கி சந்தைகளில் விற்று விட்டு திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரில் உள்ள சந்தைக்கு ஆடுகளை திங்கள்கிழமை கொண்டு சென்று விற்பனை செய்து விட்டு மீதம் விற்காமல் உள்ள ஆடுகளுடன் மினி டெம்போவில் ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தபோது பிடிபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர் வைத்திருந்த பணத்தை உரிய ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்து நாமக்கல் மக்களவைத் தொகுதி உதவி தேர்தல் அலுவலரும், சங்ககிரி வருவாய்க் கோட்டாட்சியருமான மு.அமிர்தலிங்கத்திடம் ஒப்படைத்தனர்.