தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளில் எக்ஸ்பிரஸ் மற்றும் டீலக்ஸ் என்ற பெயரில் அண்மையில் புதிதாக விதிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று தம்மம்பட்டி மக்கள் பொதுநலக் கூட்டமைப்புக் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தம்மம்பட்டி மக்கள் பொதுநலக் கூட்டமைப்பு சார்பில், அரசுப் போக்குவரத்துக் கழக முதன்மைச் செயலாளர், மண்டல இயக்குநர்களுக்கு அனுப்பிய கோரிக்கை மனு:
தற்போது புதிய பேருந்துகள் துறையூர் - சேலத்துக்கு தம்மம்பட்டி வழியாக இயக்கப்படுகிறது. அதில், தம்மம்பட்டி-சேலத்துக்கு வழக்கமான அரசுக் கட்டணம் ரூ. 41 வசூலிக்காமல் ரூ. 55 வசூலிக்கின்றனர்.
இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக புதிய பேருந்துகளுக்கு மட்டும் எக்ஸ்பிரஸ் அல்லது டீலக்ஸ் என்று பேருந்தின் முன்பக்க கண்ணாடிகளில் ஒட்டப்பட்டுள்ளது.
அந்தப் பேருந்துகள் அனைத்தும் , மற்ற அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் செல்லும் அதே நேரத்தில்தான் குறிப்பிட்ட ஊரைச்
சென்றடைகிறது.
மேலும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்றுதான் (அதாவது நகரப் பேருந்துகள்போல) செல்கின்றன. சாதாரணப் பேருந்துகளுக்கும், எக்ஸ்பிரஸ் ,டீலக்ஸ் பேருந்துகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இந்த நிலையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது முறை இல்லை.
கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் பேருந்துகள் பாயிண்ட் டூ பாயிண்ட்டாகவோ, அல்லது 1 டூ 5 ஆகவும் இல்லை. எனவே, கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணத்தைக் குறைத்து நிர்ணயம் செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.