வாழப்பாடி அருகே வனப்பகுதியில் இருந்து மருத்துவ குணம் கொண்ட மூலிகை மாவலிக்கிழங்கை தோண்டியெடுத்து கடத்தியவரை கைது செய்த வனத் துறையினர், ரூ.70 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.
சேலம் மாவட்டம், கல்வராயன் மலை வனப் பகுதியிலிருந்து மருத்துவ குணம் கொண்ட அரிய வகை மூலிகையான மாவலிக்கிழங்குகளை தோண்டியெடுத்து சேலத்துக்கு காரில் கடத்துவதாக, சேலம் மாவட்ட வன அலுவலர் ஆ.பெரியசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சேலம் வனக்கோட்டத்தில் கல்வராயன்மலை, ஆத்தூர் மற்றும் வாழப்பாடி வனச்சரகங்களில் உள்ள வனச்சோதனை சாவடிகளில், கடந்த சில தினங்களாக தீவிரக் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
வாழப்பாடி வனச்சரகம் இடையப்பட்டி வனச்சோதனை சாவடியில் வனச்சரகர் ஞானராஜ், வனவர் தங்கராஜ் மற்றும் வனக்காப்பாளர் குணசேகரன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கருமந்துறையிலிருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த காரை நிறுத்தி தணிக்கை செய்தனர். அந்த காரில் 25 கிலோ மாவலிக்கிழங்கு கடத்திச் செல்வதைக் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து காரில் வந்தவரைப் பிடித்து வனத் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர் கருமந்துறையைச் சேர்ந்த சென்னகேசவன் (41) என்பதும், கல்வராயன் மலைப் பகுதியில் இருந்து மருத்துவ குணம் கொண்ட மாவலிக்கிழங்குகளை தோண்டியெடுத்து சேலத்துக்கு கடத்திச் சென்று விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சென்னகேசவனை கைது செய்த வாழப்பாடி வனத் துறையினர், மாவலிக்கிழங்கு மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட நபர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரிடம் வனச்சட்டப்படி ரூ.70,000 அபராதம் வசூலிக்கப்பட்டது. அபராதம் செலுத்திய பிறகு காரை விடுவித்த வனத் துறையினர், வனப் பகுதியில் அத்துமீறி நுழைந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்து அனுப்பி வைத்தனர்.