சேலம் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு மே 20-இல் தொடங்குகிறது.
இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் எஸ்.கலைச்செல்வன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2019-20-ஆம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு கலை- அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு மே 20 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
இளநிலை தமிழ் இலக்கியப் பாடப் பிரிவுக்கான கலந்தாய்வு (கட் ஆஃப் 40 வரை) மே 20-ஆம் தேதி காலையில் நடைபெறும்.
இளநிலை ஆங்கிலப் பாடப் பிரிவுக்கான கலந்தாய்வு(கட் ஆஃப் 40 வரை) பிற்பகலில் நடைபெறும்.
இதைத் தொடர்ந்து, கணிதம், புள்ளியியல் ,இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியமைப்பியல், புவியியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் உள்ளிட்ட அனைத்து அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு(கட் ஆஃப் 140 வரை) மே 21 ஆம் தேதி நடைபெறும். மேலும் அனைத்து அறிவியல் பிரிவு மாணவிகளுக்கான கலந்தாய்வு(கட் ஆஃப் 140 வரை) மே 22 ஆம் தேதி நடைபெறும். வணிகவியல், வணிக நிர்வாகவியல், கூட்டுறவியல், வரலாறு ,பொருளியல், அரசியல்சார் அறிவியல், பொது நிர்வாகவியல் உள்ளிட்ட அனைத்து கலைப்பிரிவு மற்றும் வணிகவியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு மே 27 ஆம் தேதி நடைபெறும். இதைத்தொடர்ந்து அனைத்து கலைப்பிரிவு மற்றும் வணிகவியல் மாணவிகளுக்கான கலந்தாய்வு மே 28 ஆம் தேதி நடைபெறும் என்றார்.