ஏற்காடு பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படுமா?
By DIN | Published On : 18th May 2019 09:14 AM | Last Updated : 18th May 2019 09:14 AM | அ+அ அ- |

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வரும் நிலையில் பேருந்து நிலையத்தில் பயணிகளின் தாகம் தீர்க்க குடிநீர் வசதி இல்லாதது மக்களுக்கு பெரும் அவதியை ஏற்படுத்தி வருகிறது.
ஏற்காட்டில் மலர்க் கண்காட்சி விரைவில் தொடங்கவுள்ள நிலையில், கோடைக் காலத்தை முன்னிட்டு ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்காடு பேருந்து நிலையம் மூலம் உள்ளூர் மக்களும், வெளியூர் பயணிகளும் வந்து செல்கின்றனர்.
பேருந்து நிலையம் வரும் பயணிகளுக்கு குடிநீர் வசதி இன்னமும் செய்து கொடுக்கப்படாததால் பொதுமக்கள் அருகில் உள்ள கடைகளில் குடிநீர் புட்டிகள் வாங்கி அருந்த வேண்டிய நிலை உள்ளது. பேருந்து நிலையத்தைச் சுற்றி 50-க்கும் மேற்பட்ட கடைகள், சிற்றுண்டிகள், டீ கடைகள் இயங்கி வருகின்றன. பேருந்து கடைக்காரர்களும் குடிநீர் வசதியின்றி அவதிக்குள்ளாகின்றனர்.