மேட்டூர் அருகே காவிரி கரையில் குடிநீருக்காகத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழக- கர்நாடக எல்லையில், காவிரி கரையில் காரைக்காடு, கோவிந்தப்பாடி, செட்டிப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் கொளத்தூர் - காவேரிபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுதொடர்பாக கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடமும், காவேரிபுரம் ஊராட்சி நிர்வாகத்திடமும் கிராம மக்கள் முறையிட்டும் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர்கள் புகார் கூறுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியது:-
காவிரி கரையில் இருந்தாலும் காவிரி நீரை கண்ணால்தான் பார்க்க முடிகிறது. குடிக்க முடியவில்லை.
வறட்சி காரணமாக, கிணறுகளும், ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. இதனால் தண்ணீருக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
வீட்டில் இருக்கும் குடங்கள், பாத்திரங்களை குழாயடியில் வரிசையில் வைத்து குடிநீருக்காகக் காத்திருக்கிறோம்.
மேட்டூரில் இருந்து வேலூர், சேலம், ஆத்தூர் , காடையாம்பட்டி, மேச்சேரி, ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. குடிநீர் விநியோகத்தை சீரமைக்காவிட்டால், போராட்டம் நடத்துவோம் என்றனர்.