மே 31ல் ஏற்காடு கோடைவிழா, மலர்க் கண்காட்சி தொடக்கம்: ஆட்சியர்

"ஏழைகளின் ஊட்டி' என்றழைக்கப்படும் ஏற்காட்டில் 44-ஆவது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி

"ஏழைகளின் ஊட்டி' என்றழைக்கப்படும் ஏற்காட்டில் 44-ஆவது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி வரும் 31-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆர். ரோகிணி ராம்தாஸ்  தெரிவித்தார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முதல்வரின் உத்தரவின்பேரில் சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் ஏற்காடு கோடைவிழா மற்றும் மலர்க் கண்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் நிகழ் ஆண்டும் சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 44-ஆவது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி வரும் வெள்ளிக்கிழமை (மே 31) முதல்  ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) வரை மூன்று நாள்கள் நடைபெறவுள்ளது.
ஏற்காடு அண்ணா பூங்காவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்களைக் கொண்டு மலர்க் கண்காட்சி தோட்டக்கலைத் துறை சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
மேலும், காய்கறி கண்காட்சி, பழக் கண்காட்சியும் அமைக்கப்படவுள்ளன.
கோடை விழாவில் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறை பணிவிளக்க முகாம் நடத்தப்படவுள்ளது.
கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் செல்லப் பிராணிகள் (நாய்கள்) கண்காட்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் ஆரோக்கிய குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவு போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத் துறையின் சார்பில் படகு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
சுற்றுலாத் துறை மற்றும் கலைப் பண்பாட்டுத் துறை ஆகிய துறைகளின் சார்பில் பல்வேறு வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன. கோடை விழா மலர்க் காட்சியை பள்ளி குழந்தைகள் பார்த்து பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் 3 நாள்கள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com