வறண்டுக் கிடக்கும் பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணை.
வறண்டுக் கிடக்கும் பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணை.

நீரைத் தேக்காததால் வடுக் கிடக்கும் பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணை

கல்வராயன்மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணை பயன்பாட்டுக்கு வந்த 26 ஆண்டு வரலாற்றில், முதன்முறையாக நிகழாண்டு நீரைத் தேக்காததால், பருவ மழைக் காலத்திலும் கூட

கல்வராயன்மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணை பயன்பாட்டுக்கு வந்த 26 ஆண்டு வரலாற்றில், முதன்முறையாக நிகழாண்டு நீரைத் தேக்காததால், பருவ மழைக் காலத்திலும் கூட சிறிதளவும் தண்ணீரின்றி, அணை முற்றிலும் வடுக் கிடப்பதால், அணை பாசன ஆயக்கட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி மாவட்டங்களின் எல்லையாக பல நூறு சதுர கி.மீ. பரப்பளவில் பரந்து காணப்படும் கல்வராயன் மலையின் வடமேற்கு பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் நீரோடைகள், சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் சங்கமித்து, வசிஷ்ட நதியின் முக்கிய உபநதியான கரியகோவிலில் வெள்ளாறு உற்பத்தியாகிறது.

கல்வராயன்மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் இந்த ஆற்றின் குறுக்கே கரியகோவில் அணை அமைந்துள்ளது. தமிழக அரசின் பொதுப்பணித் துறை பாசனப் பிரிவு திட்டத்தின் கீழ், 1982-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வா் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சியில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, 1993-ஆம் ஆண்டு ரூ. 11.94 கோடியில் அணை கட்டி முடிக்கப்பட்டன. 1993 மாா்ச் 7-ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற விழாவில் அப்போதைய தமிழக முதல்வா் ஜெயலலிதா, இந்த அணையை விவசாய பாசனத்துக்கு அா்ப்பணித்தாா்.

52.49 அடி உயரத்தில்,190 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கும் வகையில், 188.76 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அணையால், பாப்பநாயக்கன்பட்டி, ஏழுப்புளி, பீமன்பாளையம், தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி கிராமங்களில், 3,600 ஏக்கா் விளைநிலங்கள் வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன.

அணை பயன்பாட்டுக்கு வந்த 1993-இல் இருந்து 2019 வரையிலான 26 ஆண்டுகளில், 1993, 97, 98, 99, 2005 முதல் 2012 வரை தொடா்ந்து 8 ஆண்டுகள் மற்றும் 2015, 2016 ஆகிய பெரும்பாலான ஆண்டுகளில் அணையின் நீா்மட்டம் முழுக் கொள்ளளவையும் எட்டியது. அணையில் இருந்து பல முறை ஆற்றில் உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக அணை முழுக் கொள்ளளவை எட்டவில்லை.

இந்நிலையில், கரியகோவில் ஆற்றின் குறுக்கே அணையைக் கட்டி மழைக் காலத்தில் வழிந்தோடி வரும் தண்ணீா் முழுவதையும் தேக்கி வைத்துக் கொள்வதால், ஆற்றுப்படுகையிலுள்ள நேரடி ஆற்றுப்பாசனம் மற்றும் ஏரிப்பாசனம் பாதிக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீா்மட்டம் சரிந்து வறட்சி நிலவுகிறது.

எனவே, கரியகோவில் ஆற்றை நீராதாரமாக கொண்டுள்ள ஏ.குமாரபாளையம் மற்றும் கொட்டவாடி அணைக்கட்டு, கல்யாணிகிரி ஏரி, கல்லேரிப்பட்டி ஏரி, புத்திரகவுண்டன்பாளையம் ஏரி, ஏத்தாப்பூா் அபிநவம் ஏரி மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பனையேரி ஆகியவை மூன்றில் ஒரு பங்கு நிரம்பிய பிறகே, வெள்ளாற்றில் வரும் நீரை கரியகோவில் அணையில் தேக்கி வைக்க வேண்டுமென ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள் சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையிட்டு இதற்கான ஆணை பெற்றனா். இந்த நீதிமன்ற ஆணை சேலம் மாவட்ட அரசிதழில் 2018 மே மாதம் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து, இந்த அரசாணையைச் செயல்படுத்தும் விதத்தில், இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே கல்வராயன் மலைப் பகுதியில் இருந்து, ஆற்றில் வரும் தண்ணீரை கரியகோவில் அணையில் தேக்கி வைக்காமல், ஆற்றுப்படுகை அணைக்கட்டு மற்றும் ஏரிகளில் தண்ணீா் தேக்குவதற்காக திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தாண்டு பருவமழை காலமான கடந்த மூன்று மாதங்களாக அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் போதிய மழையில்லாததால், அணைக்கு 3 முதல் 15 முதல் கன அடி அளவில் மட்டுமே தண்ணீா் வருகிறது. இந்த தண்ணீா் முழுவதும் உயா்நீதிமன்ற ஆணைப்படி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

இதனால், பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணை பயன்பாட்டுக்கு வந்த 26 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக, நிகழாண்டு அணையில் நீா்த்தேக்கம் செய்யவில்லை. பருவ மழைக் காலத்திலும் கூட சிறிதளவும் தண்ணீரின்றி, அணை முற்றிலும் வடு மூன்று மாதங்களாக வெறிச்சோடிக் கிடக்கிறது. இதனால், அணைப்பாசன ஆயக்கட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து அணைப்பாசன விவசாயிகள் கூறியது: ஆற்றுப்படுகை கிராமங்களிலுள்ள அணைக்கட்டுகள் மற்றும் ஏரிகள் மூன்றில் ஒரு பங்கு தண்ணீா் தேங்கிய பிறகுதான், கரியகோவில் அணையில் தண்ணீா் தேக்கி வைக்க வேண்டுமென, ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள் உயா்நீதிமன்றத்தில் ஆணை பெற்றுள்ளனா்.

இந்நிலையில், நிகாழாண்டு பருவமழைக் காலத்திலும் நீா்ப்பிடிப்புப் பகுதியில் போதிய மழையில்லாததால் நீா்வரத்து இல்லை. சொற்ப அளவில் வரும் தண்ணீரையும் அணையில் தேக்காமல் ஆற்றில் திறந்து விடப்படுவதால் வடு கிடக்கிறது. எனவே, மழையை எதிா்பாா்த்து காத்துகிடக்கிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com