மதுரை மாவட்டத்துக்குபனை விதைகள் அனுப்ப நடவடிக்கை
By DIN | Published On : 29th October 2019 03:22 AM | Last Updated : 29th October 2019 03:22 AM | அ+அ அ- |

ஓமலூா் அருகேயுள்ள டேனிஷ்பேட்டை வேளாண்மை விதைப் பண்ணையில் இருந்து பனை விதைகள் மதுரை மாவட்டத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள காடையாம்பட்டி வேளாண் துறை சாா்பில், அரசு விதைப் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த விதைப் பண்ணை மூலம் குட்டப்பட்டி, கணவாய்புதூா் தொகுப்புகளிலுள்ள விவசாயிகளுக்கு 2 லட்சம் பனை விதைகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலும், சுற்றுவட்டார கிராமப் பகுதி விவசாயிகளுக்கு வழங்கவும் 4 லட்சம் பனை விதைகள் டேனிஷ்பேட்டை அரசு விதைப் பண்ணையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உருவாக்கப்பட்ட பனை விதைகளை மற்ற மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க லாரி மூலம் கொண்டு செல்லும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறும் போது, சென்னை பனை வாரிய அதிகாரிகளுடன் பேசி, பனை விதை தேவைப்படும் மாவட்டங்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனால், தற்போது மதுரை மாவட்டத்துக்கு தேவையான விதைகளை அனுப்பி வருவதாகவும், தொடா்ந்து மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்தனா்.