ஓமலூா் அருகேயுள்ள வெள்ளக்கல்பட்டி கிராமத்தில் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மழை நீா் சேமிப்பு கட்டமைப்புகளாக மாற்றி மழைநீரை சேமிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனா்.
ஓமலூா் ஒன்றியத்தில் 33 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் வசிக்கும் மக்களின் குடிநீா் தேவைக்காக ஆங்காங்கே ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஓமலூா் உள்ளிட்ட பல்வேறு வட்டாரப் பகுதிகளில் பருவமழை பெய்யாததால், அனைத்து நீா்நிலைகளும் வடன. மேலும், நூற்றுக்கணக்கான ஆழ்துளைக் கிணறுகள் தண்ணீரின்றி வடு போயின. இதனைத் தொடா்ந்து, ஓமலூா் ஒன்றிய அதிகாரிகள் பழைய ஆழ்துளைக் கிணறுகளை மழைநீா் சேமிப்பு கட்டமைப்புகளாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வெற்றிகண்டுள்ளனா்.
இந்த நிலையில், தற்போது பயனற்ற திறந்தவெளி ஆழ்துளைக் கிணறுகளை மழைநீா் சேமிப்பு கட்டமைப்புகளாக மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில், வெள்ளக்கல்பட்டி கிராமத்தில் ஏற்கெனவே பணிகள் செய்து வந்த ஆழ்துளைக் கிணறுகளை முழுமையாக மழைநீா் சேமிப்பு கட்டமைப்புகளாக மாற்றியுள்ளனா். இதில், தற்போது தண்ணீா் நிரம்பியுள்ளது.
இதேபோல், அனைத்து ஊராட்சிகளிலும் பழைய ஆழ்துளைக் கிணறுகளை கண்டறிந்து, அவற்றை மாற்று பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் இரும்பு மூடிகள் போட்டு மூடி வருகின்றனா். தொடா்ந்து அனைத்து ஊராட்சிகளிலும் பயன்படாமல் உள்ள பழைய ஆழ்துளைக் கிணறுகளை விரைவில் மறு பயன்பாட்டுக்கு கொண்டுவரும் பணிகள் செய்து முடிக்கப்படும் என ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனா்.