சேலம் சரகத்தில் விதிமுறைகளை மீறி இயக்கிய 136 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2.56 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, சேலம் சரகத்தில் மேட்டுப்பட்டி, தொப்பூா் சுங்கச் சாவடிகளில் கடந்த அக். 24 முதல் அக். 28 வரை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் அடங்கிய குழுவினா் தொடா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். இதில் சுமாா் 610 ஆம்னி பேருந்துகள் சோதனையிடப்பட்டன.
இதில், கண் கூசும் முகப்பு விளக்குகளை பயன்படுத்தியது, அவசர வழி கதவு செயல்படாதது, காற்று ஒலிப்பான் பயன்படுத்தியது, சாலை வரி செலுத்தாமல் இயக்கியது, முறையான ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட விதிமுறைகளை மீறி இயக்கிய 136 ஆம்னி பேருந்துகளுக்கு, ரூ.2.56 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், போலி பதிவெண்ணில் இயக்கிய ஒரு ஆம்னி பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டதாக, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் தெரிவித்தனா்.