ஓமலூர் குண்டுக்கல் அருகே சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
ஓமலூர் அடுத்துள்ள குண்டுக்கல் கிராமம் வழியாக சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தப் பகுதியில் அதிகளவில் கனரக வாகனங்கள் செல்வதால் விபத்துகள் நடப்பது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் தருமபுரியில் இருந்து சேலத்தைச் சேர்ந்த ரவி என்பவர் காரை ஓட்டி வந்தார். அப்போது முன்னால் சென்ற அரசுப் பேருந்து திடீரென நின்றது. இதனால் பேருந்து மீது மோதாமல் இருப்பதற்காக காரை திடீரென நிறுத்தியுள்ளார்.அப்போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி, கார் மீது மோதி சாலையை ஒட்டியிருந்த பாறை மீது தள்ளியது. மேலும், லாரியும் பாறை மீது மோதி நின்றது.
இந்த விபத்தில், காரின் கதவுகள் திறக்க முடியாத அளவு மாட்டிக் கொண்டது. அதேபோன்று லாரியின் முன்பக்கம் சேதமடைந்து லாரியின் கதவுகளை அடைத்துக் கொண்டது. இதனைத் தொடர்ந்து காரில் வந்த ரவி, லாரியில் இருந்த ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோரை அப்பகுதி மக்கள் மீட்க முயன்றனர். ஆனால், முடியாத நிலையில் ஓமலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் கார் மற்றும் லாரியில் மாட்டிகொண்ட அனைவரையும் மீட்டனர். இதையடுத்து தீவட்டிப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து லாரியையும், காரையும் அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றனர்.இந்த விபத்தினால் சுமார் அரைமணிநேரம் வாகனப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.