தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டார சிவாலயங்களில் பிரதோஷ விழா புதன்கிழமை நடைபெற்றது.
தம்மம்பட்டி ஸ்ரீ காசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் கோயிலில் பிரதோஷ விழாவில் பொதுமக்கள் கொண்டு வந்திருந்த பால், தயிர், சந்தனம், திருநீறு, குங்குமம் , பஞ்சாமிர்தம், மஞ்சள், திருமஞ்சனம் உள்ளிட்ட பொருள்களால் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து நந்தீஸ்வரருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு, மலர், அருகம்புற்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. உற்சவமூர்த்தி கோயிலுக்குள் வலம் கொண்டு வரப்பட்டார். முன்னதாக சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இவ்விழாவில் தம்மம்பட்டி சுற்று வட்டார மக்கள் திரளாகப் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல கெங்கவல்லி, வீரகனூர் , செந்தாரப்பட்டி சிவாலயங்களிலும் பிரதோஷ விழா நடைபெற்றது.
சங்ககிரியில்... சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.
அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் சுவாமிகளுக்கு சோமவாரமான புதன்கிழமை காலையில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மாலையில் உற்சவமூர்த்தி சுவாமிகளுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு பொருள்களை கொண்டு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆத்தூரில்...ஆத்தூர் அக்ரஹார வரசித்தி விநாயகர் கோயிலில் பிரதோஷ விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆத்தூர் அக்ரஹார வரசித்தி விநாயகர் கோயிலில் அமைந்துள்ள சிவன் கோயிலில் நந்திபெருமானுக்கு பிரதோஷ விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.