வாழப்பாடி அருகே மன்னாயக்கன்பட்டியில் ஷீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வாழப்பாடி அருகிலுள்ள மன்னாயக்கன்பட்டி அமர்ணா ஓம் மலைக்குன்று அடிவாரத்தில் இரண்டு ஏக்கர் பரப்பளவில், தியான மண்டபத்துடன் கூடிய பிரமாண்டமான ஷீரடி சாய்பாபா கோயில் கட்டப்பட்டது.
இக்கோயிலில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியில் இருந்து 4 அடி உயரத்தில் வெலிங்ஸ்டன் பளிங்குக் கல்லில் வடிவமைக்கப்பட்ட ஷீரடி சாய்பாபா சிலை செவ்வாய்க்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஆஞ்சநேயர், ராஜகணபதி மற்றும் மும்மூர்த்தி தத்தாத்தியார் சுவாமி சிலைகளும் சிறப்பு பூஜைகளுக்கு பின் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இக்கோயில் கும்பாபிஷேக விழா மற்றும் சுவாமிகள் கண்திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை காலை விமரிசையாக நடைபெற்றன. வாழப்பாடி பகுதி மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை சாய்பாபா கோயில் நிர்வாகிகள் ஜவஹர், மாதேஸ்வரி, அரசவர்மன், மணிமாறன், ஜாஸ்ரீ மற்றும் சாய் பக்தர்களும், விழாக்குழுவினரும் செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவைத் தொடர்ந்து 48 நாள்களுக்கு மண்டலாபிஷேக சிறப்பு பூஜை நடைபெறுமெனவும், பூஜையில் கட்டளைதாரர்களாக பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.