அணைகள் வேகமாக நிரம்புவது மண் வளத்துக்கு உகந்தது அல்ல: ஈஷா யோகா மையத் தலைவர் ஜக்கி வாசுதேவ்

அணைகள் வேகமாக நிரம்புவது மண் வளத்துக்கு உகந்தது அல்ல என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கூறினார்.
அணைகள் வேகமாக நிரம்புவது மண் வளத்துக்கு உகந்தது அல்ல: ஈஷா யோகா மையத் தலைவர் ஜக்கி வாசுதேவ்

அணைகள் வேகமாக நிரம்புவது மண் வளத்துக்கு உகந்தது அல்ல என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கூறினார்.
 காவிரி நதிக்கு புத்துயிரூட்ட காவிரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் துவக்கி உள்ளார்.
 இந்த இயக்கத்தில் கர்நாடக, தமிழக அரசுகள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிக்க தலைக் காவிரி முதல் சென்னைவரை மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 3-ஆம் தேதி தலைக் காவிரியில் புறப்பட்ட அவர் ஹன்சூர், மைசூரு, மாண்டியா, பெங்களூரு வழியாக புதன்கிழமை தமிழகம் வந்தார். வியாழக்கிழமை மேட்டூர் அருகே மேச்சேரியில் ஜே.எஸ்.டபிள்யூ. தேனிரும்பு தொழிற்சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து நிகழ்ச்சியில், ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:
 தமிழ் மண்ணில் காவிரி கூக்குரல் இரண்டு நாள் பயணத்தை இங்கு துவக்கி உள்ளேன். இது இன்னொரு மரம் வைக்கும் இயக்கம் அல்ல. நாட்டுப் பிரச்னை என்ன? என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இது மண் வளத்துக்கு உகந்தது அல்ல. கடந்த 20 ஆண்டுகளில் நமக்கு உணவு கொடுக்கும் மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த நான்கு போர்களில் கூட இவ்வளவுபேர் இறக்கவில்லை. காவிரி படுகையில் 12 ஆண்டுகளில் 47 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
 கடந்த நூறு ஆண்டுகளில் ஒரு சில ஆண்டுகளைத் தவிர மற்ற ஆண்டுகள் நல்ல மழை பெய்துள்ளது. வெள்ளம் வந்த பகுதிகளில் சில மாதங்களில் வறட்சி ஏற்படுகிறது. விவசாயிகளின் கைகளில் 80 சதவீத நிலங்கள் உள்ளன. விவசாய நிலங்களில்தான் மரங்கள் வளர்க்க முடியும். காவிரி வடிநில பகுதியில் 87 சதவிகித மரங்களை அப்புறப்படுத்தி விட்டோம். நமக்குப் பிரச்னைகள் தெரியும், அதற்கான தீர்வும் தெரியும் ஆனால் யாராவது செய்யட்டும் என விட்டு விடுகிறோம். காவிரி வடிநிலப் பகுதியில் மூன்றில் ஒரு பங்கு மரங்களை வளர்க்க வேண்டும். மரங்கள் வளர்க்க தமிழக-கர்நாடக மாநில அரசுகள் முதல் நான்கு ஆண்டுகளுக்கு விவசாயிகளுக்கு மாநிலம், வழங்குவதாக உறுதி அளித்துள்ளன. காவிரி கூக்குரல் என்பது நூறு ஆண்டுகளில் நடப்பட வேண்டிய 242 கோடி மரங்களை 12 ஆண்டுகளில் நடுவதற்கான இயக்கம். அவ்வாறு செய்தால் தண்ணீரை காவிரியில் பழையபடி மீண்டும் பார்க்க முடியும் என்றார்.
 "பெண் குழந்தைகளுக்கு காவேரி என பெயர் வைக்க வேண்டும்'
 பெண் குழந்தைகள் பிறந்தால் காவேரி என பெயர் சூட்ட வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கூறினார். ஜேஎஸ்டபிள்யூ ஆலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது மேட்டூர் அணை நிரம்பி இருக்கும் காட்சி மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் வருடம் முழுவதும் இந்த நிலை நீடிப்பது இல்லை. கடந்த 40 ஆண்டுகளில் 44 சதவிகிதம் முதல் 46 சதவிகிதம் வரை மழை குறைந்துள்ளது. இது மீண்டும் வரவேண்டும் என்றால் காவிரிகரைகளை பலப்படுத்த வேண்டும். காவிரி என்றால் இனி பிரச்னை இல்லை. காவேரி தாய் என அழைக்க வேண்டும். மேட்டூரில் பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்கு காவேரி எனப்பெயர் வைக்க வேண்டும். அனைவர் வீட்டிலும் காவேரியை அன்பாக அழைக்க வேண்டும். தற்போது மரக்கன்றுகள் வளர்ப்பது சவாலாக உள்ளது. மக்களின் ஒத்துழைப்போடு மரக்கன்றுகள் நட உள்ளோம். தென்னிந்தியாவில் 7 கோடி மரக்கன்றுகள் உள்ளன. இது போதுமானதாக இல்லை. ஆறுவருடங்களில் 242 கோடி மரக்கன்றுகள் நட வேண்டும். மரங்களை வளர்த்து தமிழ் மண்ணைக் காக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com