பெண் குழந்தைகள் பிறந்தால் காவேரி என பெயர் சூட்ட வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கூறினார்.
வியாழக்கிழமை மேச்சேரி ஜேஎஸ்டபிள்யூ ஆலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தற்போது மேட்டூர் அணை நிரம்பி இருக்கும் காட்சி மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் வருடம் முழுவதும் இந்த நிலை நீடிப்பது இல்லை. கடந்த 40 ஆண்டுகளில் 44 சதவிகிதம் முதல் 46 சதவிகிதம் வரை மழை குறைந்துள்ளது. இது மீண்டும் வரவேண்டும் என்றால் காவிரிகரைகளை பலப்படுத்த வேண்டும். காவிரி என்றால் இனி பிரச்னை இல்லை. காவேரி தாய் என அழைக்க வேண்டும். மேட்டூரில் பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களுக்கு காவிரி எனப்பெயர் வைக்க வேண்டும். அனைவர் வீட்டிலும் காவேரியை அன்பாக அழைக்க வேண்டும். தற்போது மரக்கன்றுகள் வளர்ப்பது சவாலாக உள்ளது.
மக்களின் ஒத்துழைப்போடு மரக்கன்றுகள் நட உள்ளோம். தென்னிந்தியாவில் 7 கோடி மரக்கன்றுகள் உள்ளன. இது போதுமானதாக இல்லை. ஆறுவருடங்களில் 242 கோடி மரக்கன்றுகள் நட வேண்டும். மரங்களை வளர்த்து தமிழ் மண்ணைக் காக்க வேண்டும் என்றார்.