இளம்பிள்ளை ஏரி மதகு கதவு உடைந்து குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் புகுந்தது: அதிகாரிகள் ஆய்வு

இளம்பிள்ளை அருகே ஏரி உடைந்து பெருமாகவுண்டம்பட்டி ஊருக்குள் ஏரி நீருடன் கழிவுநீர் புகுந்ததை அடுத்து அங்கு சேத விவரங்களை எம்.பி. எம்எல்ஏ, அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இளம்பிள்ளை அருகே ஏரி உடைந்து பெருமாகவுண்டம்பட்டி ஊருக்குள் ஏரி நீருடன் கழிவுநீர் புகுந்ததை அடுத்து அங்கு சேத விவரங்களை எம்.பி. எம்எல்ஏ, அதிகாரிகள் பார்வையிட்டனர்.
இளம்பிள்ளை சந்தப்பேட்டை பகுதியில் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 2. 26 கோடி மதிப்பில் திரவக் கழிவு திட்டத்தின் கீழ் திட்டப் பணி செய்யப்பட்டது. ஆனால், பணி முழுமையாக முடிக்கப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த 12-ஆம் தேதி பெய்த கனமழையால் ஏரிக்கு அதிக அளவு தண்ணீர் சென்றதில் மதகின் கதவு  உடைந்து ஏரி நீர் பெருமாகவுண்டம்பட்டி  ஊர் பகுதியில் புகுந்தது. ஊருக்குள் கரடிகுண்டு தெரு, காளியம்மன் கோயில் தெரு, வீரபத்திரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீருடன் ஏரி நீர் கலந்து 200-க்கு மேற்பட்ட வீடுகளில் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்த மழைநீரில், கழிவுநீர் கலந்ததால் பாம்புகளும் விஷப்பூச்சிகளும் அதிக அளவில் வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.  மதகு உடைந்தது குறித்து தகவல் கிடைத்ததும் சேலம் தெற்கு வட்டாட்சியர் ஆர்த்தி தலைமையில் இளம்பிள்ளை வி.ஏ.ஓ செல்வம் மற்றும்  வருவாய்த் துறை அலுவலர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: இளம்பிள்ளை ஏரியிலிருந்து நடுவனேரி ஏரிக்குச் செல்லும் ஓடையானது முற்றிலும் அடைக்கப்பட்டு இருப்பதால் மழைநீருடன் கழிவுநீரும் தாழ்வான பகுதியில் செல்கின்றன. இதை சரிசெய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து குடியிருப்புப் பகுதியில் புகுந்த கழிவு நீரை அதிகாரிகள் பார்வையிட்டனர். மேலும் அப்பகுதி  மக்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்க மருத்துவக் குழுவினர் முகாமிட்டுள்ளனர். இந்தப் பகுதிக்கு வீரபாண்டி பி.டி.ஓ. திருவரங்கம், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ, ஊராட்சி சுகாதாரப் பணியாளர்கள்  உள்ளிட்டோர் அப் பகுதியில்  தீவிர பணியாற்றி வருகின்றனர். இதைத் தொடர்ந்து பெருமாவுண்டம்பட்டி பகுதியில் ஓடையைப் பொக்லைன்  இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தியும்  மதகு கதவை சரிசெய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com