சங்ககிரியை அடுத்த புள்ளிபாளையம் அருகே குடும்ப தகராறில் திங்கள்கிழமை மாமியாரை கழுத்தை நெறித்து கொலை செய்த மருமகனை சங்ககிரி போலீஸார் தேடி வருகின்றனர்.
சங்ககிரியை அடுத்த புள்ளிபாளையம் அருகே உள்ள பாப்பான் காடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மனைவி பேபி (55). இவரது கணவர் காலமான பிறகு அப்பகுதியில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து கடந்த சில ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார்.
இவரது மகள் தீபாவுக்கும், நடராஜன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்து விட்டார். அதனையடுத்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தீபாவுக்கும் வேலூர் மாவட்டம், குப்பம்துறைபாடி காரகுப்பம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சக்கரபாணி மகன் கணபதி (34) என்பவருக்கும் 2-ஆவதாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதில் ஆவேசமடைந்த தீபா கணவரை விட்டு பிரிந்து புள்ளிப்பாளையத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு வந்து தங்கினார். மேலும் வெப்படையில் உள்ள தனியார் நூற்பாலைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இதனால், அடிக்கடி கணபதிக்கும் பேபிக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், தீபா நூற்பாலைக்கு திங்கள்கிழமை வேலைக்குச் சென்று விட்ட நிலையில், புள்ளிப்பாளையத்திற்கு சென்ற கணபதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பேபியிடம் தகராறு செய்து அவரது கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். தகவல் அறிந்ததும் சங்ககிரி போலீஸார் வழக்குப் பதிந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான கணபதியை தேடி வருகின்றனர்.