மகுடஞ்சாவடி அருகே உள்ள கன்னந்தேரி, மோட்டுக்காட்டனுர் பகுதியைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் மணிகண்டன்.
இவரது மகன் சபரி குரு. இரண்டரை வயதான இச் சிறுவனுக்குக் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதை அறிந்த பெற்றோர் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்தனர். அங்கு ஒரு வார காலமாக காய்ச்சலைக் குணப்படுத்த தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், காய்ச்சல் குணமாகவில்லை.
தீவிர சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பெற்றோர் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து மர்ம காய்ச்சல் இருப்பதாகத் தெரிவித்தனர்.
22-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது. இதனால் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலியானதை அடுத்து கன்னந்தேரி கிராமத்தில் மகுடஞ்சாவடி வட்டார மருத்துவ அலுவலர் முத்துசாமி தலைமையில் மருத்துவக் குழுவினர், சுகாதாரப் பணியாளர்கள் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தொடர்ந்து அப் பகுதியில் சுகாதாரக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.