சேலத்தில் சங்கிலித் தொடர் மோசடியில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக 5 பேர் கொண்ட கும்பலை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த கே.லெட்சுமணன்(46) "யுனிடாப் குளோபல் ஹோல்டிங், அக்வானோமியா அக்வாகல்சர் ட்ரூ இந்தியா' என்ற நிறுவனங்கள் மற்றும் ugh.coins.com என்ற இணையதள முகவரியின் மூலம் சங்கிலித்தொடர் முறையில் முதலீடுகளை பெற்று நண்டு வளர்ப்புத்தொழிலில் முதலீடு செய்து பெருந்தொகையை திருப்பித் தருவதாக விளம்பரம் செய்து வந்தார்.
இதை நம்பி சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த கே.வி. பீதாம்பரம் ரூ. 8 லட்சத்து 10 ஆயிரம் முதலீடு செய்ததாகவும், அவருக்கு சிறிதளவு தொகையை லாபமாக கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து கே.வி. பீதாம்பரத்தின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மேற்படி நிறுவனத்தில் ரூ. 1 கோடியே 25 லட்சத்தை முதலீடு செய்துள்ளனர். இதற்கான லாபத் தொகை மற்றும் அசல் தொகை மொத்தம் ரூ. 1 கோடியே 14 லட்சத்து 24 ஆயிரத்தை அவர்கள் கேட்டபோது அந்த நிறுவனத்தினர் பணத்தைத் திருப்பித் தர மறுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் சேலம் மாநகர காவல் ஆணையர் த. செந்தில் குமாரின் உத்தரவின் பேரில் காவல் உதவி ஆணையர் (பொ) சி.ஆர். பூபதிராஜன் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சென்னை வடபழனியைச் சேர்ந்த கே. லெட்சுமணன் மற்றும் நிர்வாகிகளான விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சரவணன் (எ) சாகுல் ஹமீது, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வி. உமாபதி, திருவண்ணாமலையைச் சேர்ந்த ஏ.செல்வவிநாயகம் மற்றும் எம்.சந்திரசேகரன் ஆகியோரை திங்கள்
கிழமை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து ரூ. 1 கோடியே 93 லட்சம் மதிப்பிலான சொத்துகளின் உண்மை ஆவணங்களை போலீஸார் கைப்பற்றினர். மேலும் சேலம் மாநகரில் இதுபோன்ற பல போலி நிறுவனங்கள் அதிக லாபம் மற்றும் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக்கூறி முதலீடுகளை பெற்றுக்கொண்டு ஏமாற்றும் நோக்கில் உள்ளவர்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என காவல் ஆணையர் த.செந்தில் குமார் அறிவுறுத்தியுள்ளார்.