வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், சங்ககிரி வட்டத்தில் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாமை முதல்வர் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
இதில் பொதுமக்களிடத்தில் பல்வேறு கேரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்டும், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கியும் அவர் பேசியது:
சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில், 8 ஆண்டு ஆட்சிக் காலத்தில் சங்ககிரி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் 210 கோடியில் 35,710 பணிகளும், வருவாய்த் துறையின் சார்பில் ரூ.83.5 கோடியில் 8,195 பயனாளிகளும், விலையில்லா வீட்டு மனைப் பட்டா ரூ.15.65 கோடியில் 5,825 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளன. பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் புள்ளிப்பாளையம், மாட்டையம்பட்டி அரசு ஆரம்ப சுகாதரா நிலையங்களுக்கு ரூ.83 லட்சத்தில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. வடுகப்பட்டி, மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ரூ.1.56 கோடியில் கட்டப்பட்டு 30 படுக்கைகள் கொண்டதாக மேம்படுத்தப்பட்டுள்ளன. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் மகப்பேறு திட்டத்தின் கீழ் ரூ.65 கோடியே 7 லட்சத்தில் 20,231 பயனாளிகளுக்கும், பிறக்கின்ற குழந்தைகளுக்கு 16 வகையான பொருள்கள் அடங்கிய அம்மா பரிசுப் பெட்டகம் 634 குழந்தைகளுக்கும், தாய்-சேய் நலத்துறையின் சார்பில் ரூ.20 லட்சத்தில் 969 பயனாளிக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளன.
சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்காக ரூ.3.15 கோடியில் புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் 187 கி.மீ. தொலைவு சாலைகள் ரூ.100 கோடியில் அமைக்கப்பட்டுள்ளன. சாலைகள் அகலப்படுத்தும் பணிக்காக 73 கி.மீ. சாலை ரூ.69 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. தாரமங்கலத்தில் ரூ.24 கோடியில் 3.310 கி.மீ. புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளன.
வேளாண் துறையில் ரூ.17.56 கோடியில் 87,341 பயனாளிகளுக்கும், தோட்டக்கலைத் துறையின் சார்பில், ரூ.28. 9 லட்சத்தில் 11,982 பயனாளிகளுக்கும், வேளாண் பொறியியல் துறை மூலம் 2,144 பயனாளிகளுக்கு ரூ.2.25 கோடி வழங்கப்பட்டுள்ளன. சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 158 ஊரக குடியிருப்புப் பகுதிகளுக்கு ரூ.12 கோடியில் மின்விசை மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
திமுக ஆட்சியில் உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை 32 சதவீதமாக இருந்த நிலையில், அதிமுக அரசு கல்வித் துறையில் எடுத்த புதிய மற்றும் புரட்சிகர திட்டங்களால் உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை 49 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், இந்தியளவில் உயர் கல்வி கற்போரின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றார்.