சேலத்தில் சாலை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் தாம்பூலத்தட்டுடன் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தனர்.
சேலம் மாநகராட்சி, 26-ஆவது வார்டுக்கு உள்பட்ட சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் மாநகராட்சி அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை திரண்டு வந்தனர். பின்னர் தேங்காய், வாழைப்பழம் மற்றும் வெற்றிலை பாக்குடன் கூடிய தாம்பூலத்தட்டு வைத்து அதிகாரிகளிடம் மனுவை அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சாமிநாதபுரத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட தெருக்களில் 4000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால் குப்பைகளை அகற்ற வாகனங்கள் வந்து செல்ல முடியவில்லை. சாக்கடை கழிவுகளையும் அப்புறப்படுத்த முடியவில்லை. மேலும் 10க்கும் மேற்பட்ட ஆள்துளைக் கிணறு மோட்டார்கள் மாயமாகியுள்ளன. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் நேரடியாக வந்து அதனைக் கவனிக்கும் வகையில் தாம்பூலத்துடன் மனு அளிக்க வந்துள்ளோம் என்றனர்.