மகாளய அமாவாசையையொட்டி, சேலம் சுகவனேஸ்வரர் கோயில் நந்தவனத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.
இதில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் வாழை இலையில் பூ, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, கத்திரிக்காய், பூசணிக்காய், அவரை, வெண்டைக்காய் என ஏராளமான காய்கறிகள் மற்றும் கனிகளை வைத்து வழிபட்டனர்.
இதைத் தொடர்ந்து, எள், சாதத்தால் கலந்த உணவை காகங்களுக்கு வைத்து வழிபட்டனர். இதேபோல் மேட்டூர், எடப்பாடி உள்பட காவிரி கரையோரம் உள்ள நீர்நிலைகள் மற்றும் கோயில்களிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும், மகாளய அமாவாசையையொட்டி சேலம் சித்தர்கோயில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோயில், உத்தமசோழபுரம் கரபுநாதர் கோயில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
ஆத்தூரில்...
ஆத்தூர் வசிஷ்டநதியின் தென் கரையோரம் அமைந்துள்ள கைலாசநாதர் திருக்கோயில், வடகரையில் அமந்துள்ள காமநாதேஸ்வரர் ஆலயங்களில் மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி ஏராளமானோர் வழங்கினர்.
தம்மம்பட்டியில்...
தம்மம்பட்டி சிவன் கோயில் பகுதியில் சுவேத நதிக்கரையோரம் சனிக்கிழமை காலை முதல் தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், வெளியூர்களிலுள்ள தங்களது குலதெய்வக் கோயில்களுக்கு சென்று தங்களது முறைப்படி, வழிபாடு செய்து விட்டு ஊர் திரும்பினர்.
சங்ககிரியில்...
சங்ககிரியை அடுத்த வடுகப்பட்டி கிராமத்தில் உள்ள ஈஸ்வரர் சுவாமிக்கு சனிக்கிழமை அதிகாலையிலேயே பால், தயிர், மஞ்சள், திருநீறு, சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று பூஜைகள் நடைபெற்றன.
சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயில், சங்ககிரி மலையில் உள்ள கோட்டை மாரியம்மன், முனியப்பன் சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மகாளய அமாவாசையையொட்டி கோட்டை முனியப்பன் சுவாமிக்கு பெரிய விளக்கு தயார் செய்யப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது.
புரட்டாசி சனிக்கிழமை
வழிபாடு: சங்ககிரி மலை மீது உள்ள அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி மற்றும் மங்கமலை பெருமாள், ஒருக்காமலை வரதராஜபெருமாள் கோயில், வடுகப்பட்டி சென்றாயப்பெருமாள், சங்ககிரி வி.என்.பாளையம் அருள்மிகு வரதராஜபெருமாள் கோயில்களில் புரட்டாசி 2-ஆவது வார சனிக்கிழமையையொட்டி சுவாமிகளுக்கு அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. சங்ககிரி கிரிகாலனியில் உள்ள ஸ்ரீ வீரஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள்
நடைபெற்றன.