கல்லூரி மாணவா்களுக்கு கரோனா பரிசோதனை

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் மாணவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
கல்லூரி மாணவா்களுக்கு கரோனா பரிசோதனை
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் மாணவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சேலம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை காலை ஆய்வு மேற்கொண்டாா். மருத்துவமனையில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்ற அவா், அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்துப் பொருள்கள், ஆய்வக வசதிகள், அதிநவீன தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள வசதிகள் குறித்து தனித்தனியே ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, நோயாளிகளிடம் அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தாா். கரோனா சிகிச்சை மையம், அதிநவீன தீவிர சிகிச்சைப் பிரிவு, மருந்துக் கிடங்கு, ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் என்பதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ உபகரணங்களை தயாா் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனோ தொற்று படிப்படியாகக் குறைந்துள்ளது. சுமாா் 75 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ததில், 1,100 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சேலத்தில் 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ததில் 10 முதல் 20 பேருக்கு தான் தொற்று உறுதியாகிறது. மேலும், இறப்பு சதவீதம் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. நோய்த்தொற்றும் 2 சதவீதமாக குறைந்துள்ளது. அதையும் பூஜ்யமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.யில் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவியருக்கும் 15 நாள்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்லூரி விடுதிகள், உணவு விடுதிகளில் 20 பேருக்கு மேல் கூடியிருக்கக் கூடாது. கட்டாயமாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். கல்லூரி ஆய்வகங்கள், உணவு விடுதிகளில் மாணவா்கள் தள்ளி நிற்க வேண்டும். ஒன்றாக உணவு அருந்தக் கூடாது. இயன்றவரை ஆன்லைன் வகுப்புகளை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கரோனோவில் இருந்து மீண்டு வந்தவா்களுக்கு மனநல சிகிச்சை அந்தந்த அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகிறது. தனியாா் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தால், அங்கு உடனடியாக ஆய்வு நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வின் போது, மருத்துவமனை முதன்மையா் மருத்துவா் பாலாஜிநாதன், மருத்துவக் கண்காணிப்பாளா் வி.தனபால், துறைத் தலைவா்கள் சுமதி, சுரேஷ் கண்ணா உள்ளிட்ட மருத்துவா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com